நெருங்கி வரும் தேர்தல்... மக்கள் எதிர்ப்பால் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க அரசு முடிவு
நெல்லை: தமிழகத்தில் அடுத்தவாரம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மின்தடை ஆளும்கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காத வண்ணம் காக்க, அடுத்த ஒரு வார காலத்திற்கு வீடுகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாம்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் கடுமையாக மின்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் இந்த ஆண்டும் மின் தட்டுபாடு ஏற்பட தொடங்கியுள்ளது.
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்தட்டுபாடு தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
தேவை அதிகம்...
தற்போது 12700 மெகா வாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் தேவைப்படுகிறது. தனியாரிடம் கொள்முதல் செய்தாலும் அதிகபட்சமாக 11400 மெகா வாட் அளவே மின்சாரம் கிடைக்கிறது.
கட்டுப்பாடுகள்...
சுமார் 1200 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை நிலவி வருவதால் மும்முனை மின்சாரம் வழங்குவதில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 3 முதல் 5 மணி நேரம் வரையும், நகர்புறங்களில் 2 மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் நுகர்வு அதிகரிப்பு...
தொழிற்சாலைகளுக்கு மட்டும் 3 மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் மின் நுகர்வும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அரசு உறுதி....
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் குடியிருப்பு பகுதிகளுக்கு எவ்வித காரணத்தை கொண்டும் மின்வெட்டு செய்ய கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கூடுதல் விலைக்கு....
இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து தேவையான அளவு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தனியாரிடம் இருந்து 1154 மெகா வாட் மின்சாரம் வாங்க அரசுக்கு அனுமதி உள்ளது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து சராசரியாக 1 யூனிட் 10.91 என்ற அளவில் வாங்கப்பட்டு வருகிறது.
அதுக்குப் பின்னாடி...
இதனால் மேலும் வாரத்திற்கு மின்தட்டுபாடு இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு.....