“நீ தமில்ல சொல்ப்பா” மதுரையில் மந்திரியை ஒருமையில் அழைத்த அதிகாரியால் “கலகல”
மதுரை: ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் கொடுக்க சென்ற அமைச்சரை ஒருமையில் அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் தேர்தல் அதிகாரி ஒருவர்.
புகார் அளிக்க சென்ற மந்திரிக்கு ஆங்கிலத்தில் பேச வராமல் திக்கித் திணறி உள்ளார்.
இதனை கண்ட அதிகாரி அவரை ஒருமையில் அழைத்து பேசியுள்ளார்.இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் புகார்:
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களின் பெயரை சரிபார்ப்பதாகக் கூறி அதிமுகவினர் வீடுவீடாக சென்று பணம் வழங்குவதற்கான டோக்கன் அளிப்பதாக திமுக சார்பில் தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மனு:
இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, சுந்தர்ராஜன் எம்எல்ஏ உள்ளிட்டோர் மதுரையில் தேர்தல் பார்வையாளர் அதிகாரியான ராணி குமுதினியை நேற்றுமுன்தினம் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அனுமதியுடன் ஆய்வு:
மனுவில் "தமிழக தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமாரிடம் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளபடி பெயர்கள் இருக்கிறதா என சரிபார்க்க அனுமதி கேட்டிருந்தோம். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் மதுரை தொகுதியில் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறோம் "என கூறப்பட்டிருந்தது.
பெட்டிஷன்:
மனுவை வழங்குவதற்காக தேர்தல் பொது பார்வையாளர் ராணி குமுதினியிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் சென்றனர்.
தமில்ல சொல்லு மேன்:
தேர்தல் பொது பார்வையாளரிடம் ஆங்கிலத்தில் பேசத் திணறிய அமைச்சர் "பெட்டிஷன்... பெட்டிஷன்" என்று திரும்பத் திரும்ப இழுத்துக் கொண்டிருந்தார். "நிலைமை"யைப் புரிந்து கொண்ட தேர்தல் பார்வையாளர் ராணி குமுதினி தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் "நீ தமிழில் சொல்லு" என்று போட்டுத் தாக்கினார்.
கலகலப்பான நிலைமை:
ஒரு அதிகாரி அமைச்சரையே ஒருமையில் பேசிய சம்பவம் அங்கிருந்தவர்களை தடுமாற வைத்தாலும் அதிகாரிக்கு தமிழ் தெரியாது என்பதால் நிலைமை மாறி கலகலப்பு ஏற்பட்டது.
ஏதோ கொஞ்சம் தெரியும்:
சிரித்தபடியே "உங்களுக்கு தமிழ் தெரியுமா?" என்று நிருபர்கள் கேட்க "கொஞ்ஞ்சம்... கொஞ்ஞ்சம்... தெரியும்" என்று பதிலளித்தார் ராணி குமுதினி. அதன் பிறகு மேட்டரை தமிழிலேயே தேர்தல் பார்வையாளரிடம் அமைச்சர் விளக்கிக் கூறினார்.