ஓட்டு போடும் நேரத்திலும் ஃபீசை உருவிய மின்வாரியம்- புழுக்கத்தில் தவித்த மக்கள்
சென்னை: தேர்தல் தினத்தன்றும் 'விடாது கருப்பாக' தொடர்ந்த மின்வெட்டால் வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளும் புழுக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது அதன் விருந்தோம்பல் பண்பும், தொல் கலாசாராமும்தான். ஆனால் இப்போதெல்லாம் தமிழகம் என்றால் உடனே 'ஐயோ.. அங்க கரண்டே கிடையாதே..' என்ற கூக்குரல்களைத்தான் முதலில் கேட்க முடிகிறது.
அந்த அளவுக்கு மின்சார தட்டுப்பாடு அங்கு தலைவிரித்தாடுகிறது. எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் எப்பாடுபட்டாவது மின்சார சப்ளை பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தடைபட்டு வாக்களிக்க வந்தவர்களும், வாக்குச்சாவடி அதிகாரிகளும் புழுக்கத்தில் சிக்கித் தவித்துள்ளனர்.
சென்னை கதிர்வேடு பகுதியில் கடந்த ஒருமாதகாலமாக அடிக்கடி மின் வினியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல நேற்றும் காலை 9 மணி முதல் 10 மணிவரை மின்சாரம் நிறுத்தபட்டுடுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்திருந்த திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட எண் 138, 139, 140, 141, 142 ஆகிய வாக்குச்சாவடிகளிலும் மின் வினியோகம் தடைபட்டது.
பேட்டரிகளில் இயங்கும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்றாலும், மையங்களில் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவை ஒரு மணி நேரம் இயங்காததால் புழுக்கத்திலும், வெளிச்ச குறைபாட்டாலும் அவதிப்பட்டுள்ளனர் அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள்.