"கரண்ட் கட்"டுல இது வேறயா.. இணையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் சேவை தற்காலிகமாக "கட்"!
சென்னை: தமிழ்நாட்டில் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
சில தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக இந்த இணையதள செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
இதுபற்றிய குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் இணையதளம் மூலம் வழங்கப்படும் சேவைகள் ஜூலை 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஜூலை 26 ஆம் தேதி மாலை 6 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை, மின் கட்டண நிலையை அறிதல், மின்னஞ்சல் சேவை, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான சேவைகள் வழங்கப்படாது.
இருப்பினும், நுகர்வோர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் வழக்கம் போல் தங்களது மின் கட்டணங்களைச் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.