போர்க்களமான புத்துணர்வு முகாம்... பொம்மனைத் தாக்கிய ‘கொம்பன்’: 2 யானைகள் காயம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நடந்து வரும் கோவில் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் காட்டுயானை புகுந்து தாக்கியதில் இரு யானைகள் காயமடைந்தன.
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி கடந்த 19- ஆம் தேதி முதல் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வரை 48 நாட்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 34 யானைகள் புத்துணர்வு பெற்று வருகின்றன.
நெல்லித்துறை விளாமரத்தூர் அருகே வனத்துறை யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாமும் நடைபெற்று வருகிறது. இதில் 18 யானைகள் உள்ளன.
காட்டுயானை...
இந்நிலையில், நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வந்தக் காட்டு யானை ஒன்று நேற்று மாலை பவானி ஆற்றை கடந்து வந்து யானைகள் முகாம் அருகே வந்தது. திடீரென்று அந்த யானை ஆக்ரோஷத்துடன் அங்கிருந்த சூரிய மின்வேலியை பிடுங்கி எறிந்து உள்ளே புகுந்தது.
அதிர்ச்சி...
யானைகள் புத்துணர்வு முகாமை நோக்கி காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக வருவதைப் பார்த்த வனத்துறையினர், கோவில் அலுவலர்கள், மற்றும் பாகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் முகாமுக்குள் புகுந்த காட்டு யானை அங்கு மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானைகளை நோக்கி வேகமாக சென்றது.
விரட்டும் முயற்சி...
உடனே வனத்துறையினர் மற்றும் பாகன்கள் பட்டாசுகளை வெடித்தும், பட்டாசுகளை கொளுத்தி காட்டு யானை மீது வீசியும் அதனை விரட்ட முயன்றனர். இதை பொருட்படுத்தாத காட்டு யானை முகாமில் இருந்த வனத்துறை யானைகளை ஆக்ரோஷத்துடன் தாக்கத் தொடங்கியது.
வனத்துறை யானைகள்....
அப்போது மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த வனத்துறை யானைகள் காட்டு யானையை எதிர்த்து சண்டையிட முடியாமலும், அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமலும் தவித்தன.
பிளிறல் சத்தம்...
யானைகள் மோதலால் முகாம் புழுதி கிளம்பி போர்க்களம் போன்று காட்சி அளித்தது. ஆங்காங்கே மரத்தில் கட்டப்பட்டிருந்த வனத்துறை யானைகளின் பிளிறல் சத்தம் வனப்பகுதி எங்கும் எதிரொலித்தது.
தாக்குதல்...
யானை பாகன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள யானைகளை காப்பாற்ற தொடர்ந்து பட்டாசுகளை வீசியும், அதிகமாக சத்தம் போட்டும் யானைகளுக்கான மொழியில் சத்தம் போட்டபடியும், காட்டுயானை மீது தாக்குதல் நடத்தி வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
தொடர்ந்து 10 நிமிடத்துக்கும் மேலாக அட்டகாசம் செய்த அந்த காட்டு யானை பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தது. எனினும் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை எந்த நேரத்திலும் மீண்டும் முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமை சுற்றியுள்ள புதர்களில் தீயிட்டு கொளுத்தி விடப்பட்டுள்ளது.
பொம்மன் காயம்...
காட்டு யானை தாக்கியதில் முகாமில் இருந்த பொம்மன் என்ற வனத்துறை யானையும், முதுமலை என்ற யானையும் காயம் அடைந்தன. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு வந்து அந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதல் பாதுகாப்பு....
காட்டு யானை புகுந்ததைத் தொடர்ந்து கூடுதலாக வனத்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கு வரும் பார்வையாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.