சென்னை மீனம்பாக்கம் அருகே ரயிலில் அடிபட்டு மாடு பலி.. ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: இன்று காலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின் தடையால் ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில் மாலையில் சென்னையில் இன்று மாலையில் ஒரு மாடு ரயிலில் அடிபட்டு இறந்ததால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை பழவந்தாங்கல் - மீனம்பாக்கம் இடையே இன்று மாலையில் ஒரு மாடு தண்டவாளத்தில் புகுந்து விட்டது. ரயில் அப்போது அருகில் வந்து விட்டதால் நிறுத்த முடியவில்லை. இதில் ரயிலில் அடிபட்டு மாடு பரிதாபமாக பலியானது. இதனால் அந்த ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முதலில் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவியது. பின்னர்தான் மாடு அடிபட்டது தெரிய வந்தது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். தாம்பரம் மார்க்கத்திலிருந்து வந்த ரயில்களும், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி வந்த ரயில்களும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
அலுவலகம், வேலை முடிந்து திரும்பிய மக்கள் இந்த ரயில் நிறுத்தத்தால் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர். பலர் பஸ்களை நோக்கிப் படையெடுத்ததால் பஸ்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
இருப்பினும் எக்ஸ்பிரஸ் மற்றும் ஃபாஸ்ட் பாசஞ்சர் ரயில்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.