மண்டையை பிளந்த வெயில்.. ஒரே நிமிடத்தில் 'ஓஞ்சு' போன ஈவிகேஎஸ்.. காங்கிரஸார் டென்ஷன்!
வேலூர்: ஆம்பூரில் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெயிலைத் தாங்க முடியாமல் ஒரேயொரு நிமிடம் மட்டும் பேசியது காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் இளஞ்செழியனுக்காக பிரச்சாரம் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை ஆம்பூருக்கு வந்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் போடப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில் காலை 10.10 மணிக்கு ஏறிய வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சி. ஞானசேகரன் 15 நிமிடங்கள் பேசினார்.
அப்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை உணர்ந்த இளங்கோவன் ஞானசேகரனை அடுத்து மேடை ஏறினார். வெயிலை தாங்க முடியாது என்று நினைத்த அவர் மேடையில் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். நான் பேச நினைத்தவற்றை ஞானசேகரனே பேசிவிட்டார். அதனால் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
திமுக, அதிமுகவை தாக்கி இளங்கோவன் பேசுவார் என்று நினைத்து அங்கு கூடியிருந்த காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் அவர் வெறும் ஒரேயொரு நிமிடம் மட்டும் பேசியதால் அதிருப்தி அடைந்தனர்.