மின்னணு எந்திரங்களில் கோளாறு... சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம்
சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறால் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பரமத்திவேலூர், நாகர்கோவில், மதுராந்தகம், விருகம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் மாற்று எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதனால் ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நேரம் மாலை நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு செய்ய இயலாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துவிட்டார்.