மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்: வேட்பாளர் பெயர்; சின்னம் பொருத்தப்பட்டது
நெல்லை: தமிழ்நாட்டில் 6ம் கட்டமாக ஏப்ரல்24ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொறுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்கள் அச்சிடும் பணி நிறைவடைந்து விட்டதால் அதற்கான இயந்திரங்களில் அதை பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 1436 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதில் துத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றன.
மேற்படி பணிகள் சரிபார்த்து முடிந்தவுடன் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர்.
மதுரை மாவட்டத்தில்
மதுரை லோக்சபா தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தியம் ஆகிய பேரவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன. சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய பேரவைத் தொகுதிகள் தேனி மக்களவையிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பேரவைத் தொகுதிகள் விருதுநகர் லோக்சபா தொகுதியில் இடம் பெறுகின்றன. இந்த 10 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,572 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கூடுதல் இயந்திரங்கள்
மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 லோக்சபா தொகுதிகளிலும் 15-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுவதால், இரு மின்னணு வாக்குப்பதிவு யூனிட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 5,144 வாக்குப்பதிவு யூனிட் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்காக கூடுதலாக 5 சதவீத இயந்திரங்கள் இருப்பு வைக்கப்படுகிறது.
கருவூலத்தில் இருப்பு
மதுரை மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முன்னிலையில் ரேண்டம் முறையில் பிரிக்கப்பட்டு, பேரவைத் தொகுதிவாரியாக எந்தெந்த வாக்குச்சாவடிக்குரியது என ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலும், வேட்பாளர் பெயர், சின்னம் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை வரப்பெற்றது. அவை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினார்.
நெல்லை, தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.
நெல்லை தொகுதியில் திமுக, அதிமுக, காங் உள்பட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நெல்லை தொகுதியில் 5441 இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கருணாகரன் இந்த பணிகளை மேற்பார்வையிட்டார்.
இதுபோல் தென்காசி தொகுதியில் அதிமுக, மதிமுக, இ கம்யூ, காங் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கான வேட்பாளர் பெயர், சின்னம் வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நெல்லை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அடையாள அட்டை அணிந்த ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்கள் இந்த பணியை பார்வையிட்டனர்.
அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னதாக அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் வந்து சேர்வதில் கால மாதம் ஏற்பட்டது. இதனால் தென்காசி தொகுதிக்கான வாக்கு பதிவு இயந்திரத்தில் பெயர் மற்றும் சின்னம் பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அவை சோதனை செய்யப்பட்டு சீலிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன.