சென்னை: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!
சென்னை: கடன் தொல்லையால் நீலாங்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலாங்கரை செங்கனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர் மனைவி மலர் (37). இத் தம்பதியின் குழந்தைகள் ஹரிணி (7), பரணி (3). வெங்கடேசன், பாலவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
வெங்கடேசன் அங்கு வனராஜன் என்பவர் வீட்டின் முதல் மாடியில் மாதம் ரூ. 5,500 வாடகைக்கு இருந்தார். ஹரிணி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் வேலையை விட்டுவிட்டாராம். இதன் பின்னர் வேறு வேலைக்கு வெங்கடேசன் செல்லவில்லை. இதனால் மலர் குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வந்தாராம். இதன் காரணமாக வெங்கடேசன், மலர் மிகுந்த மன வருத்ததுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெங்கடேசன் வீட்டில் இருந்து புதன்கிழமை காலை கரும்புகை வெளியேறியது. இதைக் கவனித்த வீட்டின் உரிமையாளர் வனராஜன், அவர் மனைவி ருக்மணி ஆகியோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயில் கருகிய நால்வர்
தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அந்த வீட்டின் படுக்கை அறையில் வெங்கடேசன், மனைவி மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதேநேரத்தில் பலத்த காயத்துடன் கிடந்த 3 வயது குழந்தை பரணியை போலீஸார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் பரணி இறந்தார்.
கடன் தொல்லை
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். போலீஸôர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெங்கடேசன் வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவழித்ததாலும், கடன்காரர்கள் மீண்டும் பணத்தை திருப்பிக் கேட்ட தொந்தரவு செய்து கடுமையாக நடந்து கொண்டதினாலும், வறுமையினாலும் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதில் வெங்கடேசன் புதன்கிழமை காலை தன் மீதும், தனது மனைவி, குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக் குளித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
காதல் திருமணம்
இறந்த வெங்கடேசனுக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் நெய்வேலியாகும். அவர் மனைவி மலருக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாகும். இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயம்புத்தூரில் வசித்து வந்த இவர்கள், அண்மையில்தான் நீலாங்கரைக்கு குடிவந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.