"தயக்கம்"... ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து ரசிகர்கள் ஏமாற்றம்!
சென்னை: ஒவ்வொரு பட விழாவிலும் அரசியல் பிரவேசம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி விடுவது ரஜினி ஸ்டைல். லிங்கா பட விழாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசிய பேச்சால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.
அரசியலுக்கு வருவதற்கு எனக்குப் பயமில்லை. ஆனால் தயக்கம் உள்ளது என்று ரஜினி பேசியதே இதற்குக் காரணம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. நேற்று இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், ''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என ரஜினி பேசினார்.
தொடர்ந்து ஒரே மாதிரி பேச்சு...
அரசியலில் இறங்க ஆர்வமாக இருப்பது போல, ரஜினி கூறிய இந்த வார்த்தைகள் சந்தோஷத்திற்கு பதிலாக அவரது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியைத் தான் ஏற்படுத்தியுள்ளதாம். காரணம், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி இப்படி பேசி வருவது தான்.
ஜெ.வுக்கு எதிரான பிரச்சாரம்...
மூப்பனார் த.மா.கா.,வை ஆரம்பித்து தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததும், அந்த கூட்டணிக்காக குரல் கொடுத்தார் ரஜினி. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று பேசி பரபரப்பை உண்டாக்கினார். அந்த தேர்தல் முடிவு பெரும் அலையையே தமிழகத்தில் ஏற்படுத்தியது.
பாபா படப் பிரச்சினை...
பின்னர் பாபா பட பிரச்சினையின் போது பாமகவுடன் மோதினார். இதன் எதிரொலியாக, பாஜக பக்கம் சாய்ந்து தாமரைக்கு ஓட்டளிக்க கேட்டுக் கொண்டார். ஆனால் அது ரஜினிக்குப் பலன் தரவில்லை. அவரது வாய்ஸ் அந்த தேர்தலில் எடுபடாமல் போனது.
மோடி விஜயம்...
அதேபோல், லோக்சபா தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியே ரஜினியை வீடு தேடிச் சென்று சந்தித்தார். மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றெல்லாம் ரஜினி வீட்டார் பாராட்டினார்கள்.
லிங்கா படப்பிடிப்பில்...
லிங்கா படப்பிடிப்பு மைசூருவில் நடந்த போது பாஜக தலைவர் அமித்ஷா ரஜினியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், எடியூரப்பாவும், ஈஸ்வரப்பாவும் நேரில் சந்தித்து பேசியதாகவும் எல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அடுத்து அரசியல் தான்...
லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் ரஜினி பாஜகவிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது போல் பேசினார்.
ஜெ.வுக்கு ஆதரவு...
ஆனால் சிறையிலிருந்து மீண்ட ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்து ரஜினி அறிக்கை விட பாஜக தரப்பு டென்ஷனாகிப் போனது.
பாஜகவின் தாக்கு...
இதன் காரணமாக, அமித்ஷாவின் சென்னை வருகையின் போது ரஜினி குறித்து அவர் வாய் திறக்கவில்லை. தமிழிசையும் ரஜினியை நம்பி பாஜக இல்லை என வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.
லிங்கா தான் காரணம்...
லிங்கா படம் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் நல்லபடியாக ரிலீசாக வேண்டும் என்பதற்காகத் தான் ரஜினி இவ்வாறு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
தயக்கம்...
இப்படியாக அனைத்துக் கட்சியினருடனும் நட்பைப் பேணிக் காப்பதில் வல்லவரான ரஜினி இப்போது அரசியலுக்கு வருவதில் தனக்குத் தயக்கம் உள்ளதாக பேசியுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் என்ன...?
தலைவர் ஏன் தயங்குகிறார் என்ற கேள்விகளை அவர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் ஒருமுறை, கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியல் களத்தில் இருக்கும் வரை தான் அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ரஜினி கூறியதாக தகவல் வெளியானது என்பது நினைவிருக்கலாம்.