கிருஷ்ண பரமாத்மா, வாழும் பென்னிகுவிக், பாரதியின் வாரிசு: முதல்வருக்கு 'முல்லை' விவசாயிகள் புகழாரம்!
மதுரை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் உறுதியான வெற்றியைப் பெற்று, வாழும் பென்னி குவிக்காக காட்சியளிப்பதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகள் புகழாரம் சூட்டினர்.
பாண்டவர்களை காத்த கிருஷ்ணபரமாத்மா, பாரதியின் வாரிசு என்றும் விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்தனர்.
மதுரையில், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மானக் குழுத் தலைவர் இரா.அருள்பிரகாசம் பேசியது:
உழவர்களின் விடிவெள்ளி
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சரித்திர சாதனை படைத்த சட்டப் போராளி, தமிழக மக்களின் விடிவெள்ளியாகத் திகழும் முதல்வருக்கு உழவர் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
ஒளி ஏற்றியவர்
வெளிநாட்டில் பிறந்தாலும், தனது சொத்துகளை விற்று வந்து, 130 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாறு அணையைக் கட்டி, 5 மாவட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் கர்னல் பென்னி குவிக்.
கேரள அரசின் சதித் திட்டத்தால், திடீரென அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. முன்பிருந்த அரசு இப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
சாதனை முதல்வர்
ஆனால், 3-ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் கேரள அரசின் சதியை எதிர்த்து பல வகைகளில் போராட்டம் நடத்தி, முதல் கட்டமாக 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தி சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர்.
பாரதியின் வாரிசு
இது சாதாரண சாதனை அல்ல. வரலாற்றுச் சாதனை. நிமிர்ந்த நன்னடை கொண்ட பாரதியின் வாரிசு முதல்வர்தான். தாகம் தீர்த்த முதல்வரை 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் ஏழேழு பிறவியிலும் போற்றுவோம் என்றார்.
முதல்வர் சாதனை
கம்பம் பள்ளத்தாக்கு நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் வெ.கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் சரியான முறையில் வாதிட்டு சாதித்துக் காட்டியுள்ளார் முதல்வர். அணையில் 142 அடி தண்ணீரைச் சேமிக்க 13 மதகுகளையும் இறக்கச் செய்து விவசாய சாகுபடிக்கு உதவிய முதல்வரைப் பாராட்டுகிறோம்.
பென்னிகுவிக் மணிமண்டபம்
இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக அணையைக் கட்டிய பென்னி குவிக்குக்கு மணிமண்டபத்துடன், சிலையையும் நிறுவியுள்ளார். இதன்மூலம், தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த மணிமண்டபம் திறப்பு விழாவில், விவசாயிகள் வைத்த கோரிக்கையான, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி, சொன்னதைச் செய்து காட்டியுள்ளார் முதல்வர். அவரை வாழும் பென்னி குவிக்காக விவசாயிகள் பார்க்கிறார்கள் என்றார்.
நன்றிக்கடன்
வைகை பாசன விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.மதுரை வீரன்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள முதல்வருக்கு 5 மாவட்ட விவசாயிகளும் நன்றிக்கடனைச் செலுத்தி கொண்டிருக்கிறோம்.
வாழும் பென்னிகுவிக்
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி விவசாயிகள் ஆட்சி. விவசாயிகளின் நலன் காக்கும் பொற்கால ஆட்சி. இந்த ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள், திட்டங்கள் கிடைத்துள்ளன. இச்சாதனை நிகழ்த்திவரும் முதல்வரை வாழும் பென்னி குவிக்காகப் பார்க்கிறோம் என்றார்.
வாழும் கிருஷ்ணர்
தமிழக விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் பனையூர் அ.அழகு சேர்வை பேசும் போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம், முந்தைய மத்திய, மாநில ஆட்சியாளர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களாகிய 5 மாவட்ட விவசாயிகளுக்குமான சட்டப் போராட்டத்தில் கிருஷ்ணராக இருந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி வெற்றிவாகை சூடியுள்ளார் முதல்வர்.
முதல்வருக்கு நன்றி
பாண்டவர்களாகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கு உதவிய கிருஷ்ணராகிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்க விவசாயிகள் பெரும் திரளாகக் கூடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.