நெருங்கி வரும் ஓணம் - தக்காளி விலை சரிவால் கலங்கும் விவசாயிகள்
நெல்லை: ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தக்காளி விலை திடீர் சரிவை சந்தித்துள்ளதால் நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சமீபகாலமாக இங்கு போதுமான தண்ணீர் இல்லாததால் சாகுபடி கேள்விகுறியாகி விட்டது.
இ
ந்த பகுதியில் தற்போது தக்காளி பயிரிட்டுள்ளனர். குறிப்பாக பாவூர்சத்திரம், ஆயிரப்பேரி, கீழப்பாவூர், ஆலங்குளம், சாலைபுதூர், மீனாட்சிபுரம் உள்பட பல கிராமங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கேரளாவில் 6ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பயிரிடப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை கடந்த இரண்டு தினங்களாக சரிந்து வருகிறது.
கடந்த வாரம் இந்த பகுதியில் தக்காளி விலை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்து வந்த நிலையில் மாலை ரூ.5 முதல் ரூ.6 வரை கொள்முதல் செய்தனர். இது இன்று காலை மேலும் குறைந்தது. வெறும் கிலோ ரூ.3க்கு தக்காளியை வாங்க வியாபாரிகள் தயாராக இருந்தனர்.
இதை கேட்டு தக்காளி்யை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பல விவசாயிகள் தக்காளி விலை குறைந்ததால் அதை பறிப்பதை நிறுத்தி வைத்தனர். விலை போகாத தக்காளியை கழுநீர்குளம் பகுதியில் சாலையோரம் குவியல் குவியலாக கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே தண்ணீர் இல்லாததால் தக்காளி பயிரிட மிகவும் சிரமப்பட்டோம். தற்போது லாரி தண்ணீர் ரூ.400க்கும் மேல் கொடுத்து நீர் பாய்ச்சினோம். இதில் பலர் கடன் வாங்கி பயிர் செய்துள்ளனர். இப்படி இருந்தும் விலை குறைந்தது எதனால் என்று தெரியவில்லை.
இனிமேல் விலை உயர்ந்தால் மட்டுமே தக்காளியை பறிப்போம். இல்லாவிட்டால் அப்படியே விலை நிலங்களில் போட்டு விடுவோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.