பதவி பறிக்கப்படும் முன்பே 'ரொம்ப நல்லவராக' ராஜினாமா செய்த செல்வகணபதி!!
சென்னை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள செல்வகணபதியின் ராஜ்யசபா எம்.பி. பறிபோகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளை கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரைகள் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் செல்வகணபதி, ஆச்சாரியலு, சத்திய மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரமும், பாரதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மேல்முறையீட்டுக்காக தண்டனை நிறுத்தம்
அத்துடன் செல்வகணபதி உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கிய சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி, இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார். இதனால் செல்வகணபதி மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.
தகுதி நீக்கம் செய்ய தீர்ப்பு
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.
ரஷீத் மசூத் நீக்கம்
ஏற்கெனவே உச்சநீதிமன்ற தகுதி நீக்க தீர்ப்பின் படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 1990, 91-ம் ஆண்டுகளில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாலு டிஸ்மிஸ்
அவரைத் தொடர்ந்து மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் சர்மா ஆகிய இருவரும் லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானால்..
தற்போது உச்சநீதிமன்றத்தில் செல்வகணபதி தாக்கல் செய்யப் போகும் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானால் அவரது எம்.பி. பதவி பறிபோகும்.
திடீர் ராஜினமா
அப்படி நிகழ்ந்தால் ஊழல் வழக்கில் எம்.பி பதவியை பறிகொடுத்த முதல் தமிழக எம்.பி. என்ற நிலைமையை செல்வகணபதி சந்திக்க நேரிடும். இதனை தவிர்ப்பதற்காகவே இன்று திடீரென "ரொம்ப நல்லவர்" என்ற தோற்றத்தை உருவாக்க தாமாகவே முன்வந்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் செல்வகணபதி.