புதுச்சேரி: தேர்தலை புறக்கணித்த மீனவர்கள், மலைவாழ் மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினத்தில் சுனாமி குடியிருப்பு கட்டிக்கொடுக்காத காரணத்தால் மக்கள் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல, ரோடு இல்லாததை கண்டித்து நீலகிரி தொகுதி கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்தனர்.
புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினத்தில் மீனவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இடிந்துபோன இவர்களது வீடுகளுக்கு மாற்றாக இதுவரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த மீனவர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதேபோல தேர்தலை புறக்கணித்த அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே அதே ஊரை சேர்ந்த சுமார் 50பேர் தாங்கள் வாக்களிக்க விரும்புவதாகவும் ஆனால் ஊர்க்காரர்கள் வாக்களிக்க விட மறுப்பதாகவும் குற்றம்சாட்டி அங்குள்ள சிங்கார வேலர் சிலை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் புதுச்சேரியில் மாலை 5 மணி நிலபரப்படி 70 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது.
இதேபோல நீலகிரி தொகுதியில் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி கிராம மக்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு வாகனம் வந்து செல்ல கூட சாலை வசயிலில்ை. இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே தேர்தலை புறக்கணித்துவிட்டு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சாலை போட முடிவு செய்தோம். என்றனர். அவர்கள் கூறியதைப்போல கடப்பாரை, மண்வெட்டியுடன் வந்த ஆண்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.