பில்லூர் அணை திறப்பு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஈரோடு: கோவை மாவட்டத்தில் பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை-நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தற்போது அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை, தற்போது 98 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் 4 மதகுகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பவானி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மேட்டுப்பாளையத்தில் கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்ததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பவானி அம்மன் கோவிலும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.