எலியும் தவளையும் இணைந்து அமைத்த கூட்டணியே பாஜக கூட்டணி-ஜி.கே வாசன்
நெல்லை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, எலியும், தவளையும் ஒன்று சேர்ந்தது போன்ற கூட்டணி என கிண்டல் அடித்துள்ளார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தனி ஈழம் குறி்த்தும், மீனவர்கள் பிரச்னை குறித்தும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத நிலையில் கூட்டணியில் உள்ள கட்சிகள் இதனை வலியுறுத்தி இருப்பது முரண்பாடாக இருக்கிறது என்றார்.
அதிமுக அரசு தாமதம்
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் அ.தி.மு.க அரசு தாமதப்படுத்தப்படுகிறது என்றும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசிடம் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
கூடங்குளம் மின் உற்பத்தி
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தாமதமாக தொடங்க தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் என்று கூறிய வாசன், கூடங்குளத்தில் அதிக மின்சாரம் தமிழகத்திற்கு தான் ஒதுக்கப்படுகிறது என்றும், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் தமிழக மீன்தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் வாசன் கூறினார்.
மக்கள் துணை
முன்னதாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து, மத்திய கப்பல்த் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். காங்கிரஸ் தனித்து விடப்படவில்லை கன்னியாகுமரி மக்கள் துணை இருக்கிறார்கள்.
வெற்றிப்பாதை
காங்கிரசின் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் நான்கு விதமான கூட்டணிகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லத் தெரியாமலே தேர்தலில் போட்டியிடுகின்றன.
பாஜக காணாமல் போய்விடும்
கம்யூனிஸ்டுகளுக்கோ இறங்கு முகம் தான். இனி ஏறுமுகம் என்பது அவர்களுக்கு கிடையாது. 2004, 2009 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வை மக்கள் இல்லாமல் ஆக்கினார்கள். இந்த தேர்தலிலும் அதே நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.
நிலையான ஆட்சி
இந்தியாவில் நிலையான மதசார்பற்ற ஆட்சி அமைந்திட வேண்டும் என்றால் அது சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். இந்த தேர்தல் சட்டமன்றத் தேர்தலோ, பஞ்சாயத்து தேர்தலோ கிடையாது. மத்தியில் நிலையான ஆட்சி அமைத்து, அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு இருந்திட, நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உங்களைத் தேடி வருபவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல்.
காங்கிரசுக்கு வாக்கு
அதனால், தமிழ்நாடு வளர்ச்சிப் பெற்றிட, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பெற்றிட, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிட காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்றார்.