வெயிலுக்கு முன் வாக்களித்த ஜி.கே.வாசன், ஞானதேசிகன்…
சென்னை: கொளுத்தும் வெயிலோடு லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்றுக் கெண்டிருக்கிறது.
சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மக்களோடு மக்களாக அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து சென்றனர்.
ஜி.கே.வாசன், ஞானதேசிகன்
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அபிராமபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் ஆழ்வார்பேட்டையில் உள்ள சீனிவாச காந்தி நிலையத்திலும் வாக்களித்தனர்.
வயதான பிரபல தலைவர்கள்
92 வயதாகும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
93 வயதாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என். சங்கரய்யா (93), குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.
ஜி.ரா வாக்குப் பதிவு
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம் புனித மார்க்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், தியாகராய நகரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.
டி.ராஜா, நல்லக்கண்ணு, தா.பா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தேசியச் செயலாளர் டி. ராஜா ஆகியோர் தியாகராய நகர் வெங்கட்நாராயாணா சாலையில் உள்ள தக்கர்பாபா வித்யாலாயம் பள்ளியில் வாக்களித்தனர், மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் முகப்பேரில் உள்ள மீனாட்சி உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
திண்டிவனத்தில் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். அவருடன் தர்மபுரி லோக்சபா தொகுதி வேட்பாளர் அன்புமணியும் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
சரத்குமார், ராதிகா
சமக தலைவர் சரத்குமார் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தனது மனைவி ராதிகாவுடன் வந்து வாக்களித்தார். அப்போது அவர், 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
நா.ம.க கார்த்திக்
நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வந்து வாக்களித்தார்.
வெயிலுக்கு முன்பாக
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வாக்கு சேகரிக்க வெயிலில் அலைந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வெயிலுக்கு முன்பாகவே வாக்களித்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.