மீண்டும் தேர்தல் களத்தில் 'திண்டுக்கல்' காந்திராஜன்.. ரீ என்ட்ரி கனவு நிறைவேறுமா?
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலுக்கான திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் என்ற அறிவிப்பின் மூலம் சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் எஸ். காந்திராஜன் மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். இந்த ரீ என்ட்ரியை தக்க வைத்து அவர் வெல்வாரா? என்பதுதான் இப்பகுதி வாக்காளர்களிடையேயான ஹைலைட் விவாதம்.
திண்டுக்கல் அதிமுகவில் 1980களில் கோலோச்சியவர் வி.பி. பாலசுப்பிரமணியன். இவர் 1980,84களில் வேடசந்தூர் சட்டசபை எம்.எல்.ஏ.வாக இருந்ததுடன் தமிழக சட்டசபை துணை சபாநாயகராகவும் பணியாற்றினார். இவரது காலத்திலேயே அதிமுகவில் பிரவேசம் செய்தவர் காந்திராஜன்.
எம்.ஜி.ஆர். காலத்தில் வி.பி. பாலசுப்பிரமணியன் என்றால் ஜெயலலிதா காலத்தில் எஸ். காந்திராஜன் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டார். வேடசந்தூர் அருகே மாத்தினிபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.
வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ, சட்டசபை துணை சபாநாயகர், குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் என பொறுப்புகளையும் வகித்தார் காந்திராஜன். பின்னர் அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார் காந்திராஜன்.
இதனால் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவினார் காந்திராஜன். திமுகவில் இவரும் ஒரு சீனியர் என்ற அடிப்படையில்தான் இருந்தாரே தவிர மாவட்ட செயலர் ஐ.பெரியசாமியைத் தாண்டி இவர் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு செலுத்த முடிந்ததில்லை.
திமுக கூட்டணியில் வேடசந்தூர் தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் போதெல்லாம் அது காங்கிரஸுக்கு ஒதுக்கிவிடப்பட்டு ஏமாற்றத்துடனேயே இருந்தார் காந்திராஜன். அதே நேரத்தில் காந்திராஜனும் அவரது சகோதரர் நடராஜனும் திண்டுக்கல் மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் ஒக்கலிகர் ஜாதி சங்கத்தின் பணிகளில் முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.
லோக்சபா தேர்தலில் மாவட்ட செயலர் ஐ.பெரியசாமி மகனுக்கு சீட்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காந்திராஜனுக்கு சீட் கிடைத்திருக்கிறது. நீண்டகாலம் அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த காந்திராஜன் தற்போது மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துள்ளார்.
திமுகவுக்கு வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட போதும் அதிமுகவில் இன்னமும் தமக்கு ஒரு ஆதரவு வட்டத்தையும் காந்திராஜன் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். இது இந்த தேர்தலில் தமக்கு ப்ளஸ் என்பது காந்திராஜனின் கணக்கு.
தமக்கு மீண்டும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எப்படியும் பயன்படுத்தி வென்றாக வேண்டிய நிலையில் எஸ். காந்திராஜன் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறார்.