408 விநாயகர் சிலைகள் ஊர்வலம்: கடலில் விசர்ஜனம்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் 408 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை முழுவதும் இந்து இயக்கங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில், இந்து இயக்கங்கள் சார்பில் மட்டும் 1,864 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தச் சிலைகளுக்கு கடந்த 2 நாள்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சுமார் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு சிலைகளை பிரதிஷ்டை செய்த இயக்கத்தினரால், ஆங்காங்கே பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டு சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் ஊர்வலம்
பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, சென்னையில் சமூக அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு மேளதாளங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
5 இடங்களில் கரைப்பு
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் நீலாங்கரை பல்கலைகழக நகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய 5 இடங்களில் கரைக்கப்பட்டன.
கிரேன்கள் மூலம்
சிலைகளைக் கரைக்கும் இடத்தில் ஒரு உதவி ஆணையர், 5 காவல் ஆய்வாளர், 10 உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு பெரிய சிலைகள், கிரேன்கள் மூலம் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
408 சிலைகள் விசர்ஜனம்
சென்னையில் மொத்தம் 408 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கரைக்கப்படுகின்றன.