ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா: 1000 தீபங்கள் ஏற்றி கொண்டாட்டம்
ஜெயங்கொண்டம்: ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா கங்கை கொண்ட சோழபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரம் தீபங்கள் ஏற்றி வைத்து தமிழறிஞர்கள் கொண்டாடினார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவையும், பிறந்தநாள் விழாவையும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தமிழறிஞர்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள்.
தீபச்சுடர் தொடர் ஓட்டம்
தஞ்சையில் இருந்து தீபச்சுடரை தொடர் ஓட்டமாக இளைஞர்கள் பாபநாசம் கும்பகோணம் வழியாக மாலை 5 மணியளவில் மாளிகை மேடு கொண்டுவந்தார்கள். அங்கு விழா ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோமகன் வரவேற்றார்.
யானைகள் வரவேற்பு
இந்த தீபச்சுடர் ஊர்வலத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகள் ஊர்வலத்தில் கம்பீர நடைபோட்டு வந்தன. ‘ராஜேந்திர சோழன் வாழ்க வாழ்க!' என்று ஊர்வலத்தில் எங்கெங்கும் வாழ்த்து முழக்கம். விண்ணை பிளந்தது!.
பிரம்மாண்ட ஊர்வலம்
ராஜேந்திர சோழனின் அரண்மனை அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடமான ‘மாளிகை மேட்டில்' இருந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை நோக்கி ஆராவார ஊர்வலம். புகழ்பெற்ற எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், இந்த கோவிலின் மீது ஆர்வம்காட்டிய அரசு அதிகாரிகள் ஆகியோர் தேரின் மீது உட்கார வைத்து ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்டனர்.
தாளம் போடவைத்த தப்பாட்டம்
தமிழர்களின் பராம்பரிய இசையான ‘தப்பாட்டம்' மாளிகை மேடு பகுதியையே ஆட்டம்போட வைத்துவிட்டது. பறை அடித்து அவர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்த மக்களின் கால்கள் தானாக ஆட்டம்போட்டன.
ஆயிரம் தீபங்கள்
கங்கை கொண்ட சோழபுரத்தில் மாலை 6 மணிக்கு தொடர் ஓட்டமாக கொண்டு வந்த தீபச்சுடரிலிருந்து 1,000 தீபங்களை தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலாநாயர் ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
ஜொலித்த கோவில்
விளக்கொளியில் மின்னிய கோவிலின் கொள்ளைஅழகு காண்போரை சொக்கவைத்தது. கோவிலின் சுற்றுபுறச்சுவரும் கோபுரமும் மின்விளக்குகளால் ஜொலிஜொலித்தன.
தமிழறிஞர்கள் பேச்சு
நிகழ்ச்சியில் மாமன்னன் ராஜேந்திரனின் பன்முக சாதனைகள் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ தலைமையில் எழுத்தாளர் பாலகுமாரன், ஓய்வு பெற்ற சென்னை தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி, தமிழக வேளாண்மை துறை ஆணையர் ம.ராசேந்திரன், ஓய்வுபெற்ற அரசு செயலாளர் தனவேல், தஞ்சை தொல்லியல் துறை அறிஞர் பாலசுப்ரமணியன், அரியலூர் தியாகராஜன் ஆகியோர் பேசினார்கள்.
நாட்டியாஞ்சலி
ராஜேந்திரசோழனின் வரலாறு அடங்கிய குறும்படம், தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா, ராஜேந்திரசோழனின் எழுச்சியுரை சிறப்பு நாட்டியாஞ்சலி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
மன்னனுக்கு விழா எடுத்த மக்கள்
1000 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் மண்ணை ஆண்ட சோழ மன்னனுக்கு கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து விழா எடுத்து கொண்டாடியது சிறம்பம்சமாகும். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.