திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர் – காதலனுடன் எஸ்கேப் ஆன மகள்!
அணைக்கட்டு: அணைக்கட்டுக்கு அருகில் பெண் ஒருவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த காரணத்தினால் வீட்டை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணைக்கட்டு கிராமத்தை அடுத்த மூலைகேட் புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஆர்த்தி .
இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.
திருமண செய்ய முடிவு:
ஆர்த்திக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினர். நேற்று மாப்பிள்ளை வீட்டார் ஆர்த்தியை பெண் பார்க்க வருவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் ராஜேந்திரன் ஈடுபட்டு இருந்தார்.
கடைவீதிக்கு சென்றவர்:
இது குறித்து அறிந்த ஆர்த்தி, நேற்று முன்தினம் மாலையில் அணைக்கட்டில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஏதாவது அலங்கார பொருட்கள் வாங்க செல்கிறாள் என தாயார் நினைத்துக்கொண்டார்.
வீடு திரும்பாத ஆர்த்தி:
ஆனால் 2 மணி நேரம் ஆகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகிவிட்டதால் ஆர்த்தியின் தாயாரும், தந்தை ராஜேந்திரனும் பதற்றம் அடைந்தனர். அருகில் உள்ள இடங்களிலும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
பணம், நகையுடன் ஓட்டம்:
அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வீட்டில் பார்த்தபோது திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 22 பவுன் நகை மற்றும் ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து அவர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
வாலிபருடன் மாயம்:
போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆர்த்தி, அதே ஊரைச்சேர்ந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்ததாக அந்த பகுதியினர் கூறினர்.
காதலால் வினை:
மேலும் விசாரித்தபோது ஆர்த்தியும் அந்த வாலிபரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் காதலித்து வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் நகை, பணத்துடன் ஓடிச்சென்ற ஆர்த்தியையும் அவருடன் சென்றதாக கூறப்படும் நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.