மீண்டும் 'தனிக்கட்சி'.. வாசன் ஆதரவாளர்களின் அடங்காத 'போஸ்டர் கலகம்'!!
சென்னை: 'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை' என்பதைப் போல் வாசன் அமைதியாக இருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து 'போஸ்டர்' கலகத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டிகளின் யுத்தம் 'நாடறிந்த' ஒன்று. தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ஜி.கே.வாசன் ஆதரவாளராக இருந்தாலும் அடிக்கடி முகம் சுளிப்பதால் வாசன் க்ரூப் கோபத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வாசனுக்கா? ப.சிதம்பரத்துக்கா? என்ற விவாத யுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான லாபிகளை வாசனும் சிதம்பரமும் மும்முரமாக இயக்கி வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளர்
இதனிடையே ஜி.கே.வாசனே தமிழக காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் என்று முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் சென்னையில் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் அந்த போஸ்டர்களை சென்னையில் அடித்து தமிழ்நாடு முழுவதும் இலவசமாக விநியோகம் செய்து ஒட்டச் செய்தார்.
ப.சி. தலைவர்?
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ப.சிதம்பரம்தான் தமிழக காங்கிரஸின் தலைவராகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. சில ஊடகங்களும் இதனை வெளியிட்டிருந்தன,. இது வாசன் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
தலைவா தனிக்கட்சி!
இதனால் தலைவர் பதவி இல்லையா! மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தனிக்கட்சி தொடங்குவோம் தலைவா!! என்பது போன்ற முழக்கங்களுடன் புதிய போஸ்டர்களை அடித்து வைத்துள்ளனர் வாசன் ஆதரவாளர்கள்.
மிரட்டல்...மிரட்டல்..
இப்படி செய்தாவது காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டிவிட முடியாதா என்பது வாசன் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் வாசன் எப்போது பார்த்தாலும் தனிக்கட்சி, தனிக்கட்சி என்று மிரட்டிக் கொண்டிருப்பது பழங்கதைதானே என்கிறது ராகுல் தரப்பு.
அதிரடி ப்ளான்?
இதனால் இந்த தனிக்கட்சி போஸ்டரை தமிழகம் முழுவதும் ஒட்டிய கையோடு வாசனை சில முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்திக்க வைத்து தனிக்கட்சி தோற்றத்தை ஏற்படுத்துவது என்ற ப்ளானிலும் வாசன் ஆதரவாளர்கள் குதித்திருக்கிறார்களாம்..
ஹோட்டலில் ஆலோசனை
இதற்காகவே சென்னையில் ஒரு ஹோட்டல் ஒன்றில் வாசன் ஆதரவாளர்கள் ரூம் போட்டு யோசித்து போஸ்டர்களை குவித்து குவித்து வைத்து வருகிறார்களாம்!
ஓ ரூம் போட்டு யோசிக்கிறது இதுதானோ!