மீண்டும் த.மா.கா. தொடங்கும் திட்டமா?: ஜி.கே.வாசன் மழுப்பல் பதில்
கும்பகோணம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்குவீர்களா என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் மழுப்பலான பதிலை அளித்திருப்பது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சராக ஜி.கே.வாசன் பதவி வகித்த போது அவர் மீது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்திருந்தார். தனது ராஜ்யசபா பதவி முடிவடைந்த நிலையில் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து தமக்கு எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று வாசன், ராகுலிடம் கேட்டார்.
ஆனால் ராகுலோ, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் என்று கூறிவிட்டார். இதில் வாசன் கடுமையாக அதிருப்தி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டுவதற்காக, மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவோம் என்று சுவரொட்டி அடித்து ஒட்டி வருகின்றனர்.
தமிழருவி அழைப்பு
தற்போது காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஜி.கே.வாசன் என்று புது பஞ்சாயத்தை களத்தில் இறக்கிவிட்டது வாசன் தரப்பு. அண்மையில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும் கூட, ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு வெளியேறி த.மா.கா. தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
கும்பகோணத்தில் ஆலோசனை
இந்நிலையில் கும்பகோணத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை விழா
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெறும் காமராஜர் சிலை திறப்பு விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவதாக தகவல்கள் வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
என்.எல்.சி. தொழிலாளர்கள்
என்.எல்.சி. தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு துறை சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை அனுப்பி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
மீண்டும் த.மா.கா.?
அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்குவீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட போது நேரடியாக பதிலளிக்காமல், காங்கிரசை வலுப்படுத்த பாடுபடுவேன் என்று மட்டும் வாசன் கூறினார்.
இதற்கு முன்னர் த.மா.கா.வை தொடங்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அப்படி எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கும் வாசன், இம்முறை மழுப்பலான பதிலையே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.