10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 1268 பள்ளிகளை மூட அரசு திட்டம்
சிவகங்கை: தமிழக அரசானது கிட்டத்தட்ட 1268 தொடக்கப்பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள இந்த 1268 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்காக அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
மாணவர்கள் எண்ணிக்கை:
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளிகளில் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
60 ஆயிரம் ஆசிரியர்கள்
தொடக்கப்பள்ளிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்து 980 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
ஓராசிரியர் நியமனம்:
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் இருக்கவேண்டும். ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற கணக்கீடு பின்பற்றப்படுகிறது.
200 பேருக்கு மேல் இருந்தால்
200 மாணவர்களுக்கு மேல் இருந்தால் 40 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
பத்து மாணவர்களுக்கும் குறைவு:
அரசு தொடக்கப்பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளதாக சுமார் 1268 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடப்படலாம்:
இப்பள்ளிகளை மூடிவிட்டு அந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது குறித்து அரசு, கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேள்விக்குறியாகும் வாழ்க்கை:
ஆனால், மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிவிடும்.
ஆக்கப் பூர்வமான ஆலோசனை:
பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆக்கப் பூர்வமான ஆலோசனை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.