'தங்கப் பதக்கம்' சிவாஜி கணேசன் போல கலங்கிப் போன ஓ.பன்னீர் செல்வம்... ஆறுதல் சொன்ன ரோசய்யா!
சென்னை: முதல்வராக நேற்றுப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், முதலில் தனது சட்டைப் பையில் வைத்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போட்டோவை வெளியே எடுத்து அதை வணங்கி விட்டுத்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓ.பன்னீர் செல்வத்தின் முதல் பதவிப்பிரமாணத்தின்போது என்னவெல்லாம் நடந்ததோ கிட்டத்தட்ட அத்தனையும் நேற்றும் நடந்தது.
அத்தனை பேருமே அழுத கண்களோடு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஏன் இந்த அழுகை, எதற்காக இப்படி அனைவரும் நடந்து கொண்டனர் என்ற கேள்விகளும், ஆச்சரியங்களும் அனைவர் மனதிலும் எழும் அளவுக்கு இவர்களது அழுகை உணர்ச்சிகரமாக இருந்தது.
சுத்தமாக சந்தோஷம் இல்லை
ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட யாருக்குமே சுத்தமாக சந்தோஷம் இல்லை. ஆளுநர் உள்பட அனைவருமே அமைதியாக, இறுக்கமாக இருந்தனர்.
படு சாதாரணம்
மிகவும் சாதாராணமான முறையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இருந்தது. யாரிடமும் ஒரு சுரத்து இல்லை.
தொண்டைக் கமறலுடன் பதவியேற்ற பன்னீர்செல்வம்
முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நா தழுதழுக்க அவர் சத்தியப் பிரமாணத்தை வாசித்தார். இடையில் வாசிக்க முடியாத அளவுக்கு குரல் கம்மியதால் நிறுத்தி நிறுத்தி அவர் வாசித்தார்.
ஆறுதல் சொன்ன ரோசய்யா
ஒரு வழியாக பதவியேற்றுக் கொண்டு கையெழுத்தும் போட்டு விட்டு ஆளுநரைப் பார்த்து கலங்கிப் போன கண்களுடன் வணக்கம் வைத்தார் பன்னீர் செல்வம். அவரது கோலத்தைப் பார்த்து பரிதாபப்பட்டுப் போன ஆளுநர் ரோசய்யா, பன்னீர் செல்வத்தின் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லிப் பேசினார்.