"கிரானைட்' மீண்டும் பளபளக்க தேர்தல் நன்கொடையாக ரூ1700 கோடி வாரியிறைத்த அதிபர்?
மதுரை: முடங்கிப் போன தமது "கிரானைட்' தொழில் மீண்டும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ரூ1700 கோடியை அந்த தொழிலதிபர் வாரி இறைத்துவிட்டு 'முடிவு'க்காக காத்திருக்கிறாராம்.
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 மாத காலமாக பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. தேர்தல் களத்தில் இறங்கிய பலரும் எப்படியும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடுவது என்ற கனவில் பல கோடி ரூபாயை தண்ணீராக செலவு செய்துவிட்டு போட்ட முதலீட்டை எடுக்கவும் லாப கணக்கு பார்க்கவும் இலவு காத்த கிளியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் இத்தேர்தல் மூலமாவது தமக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று பல்லாயிரம் கோடி ரூபாய் முடங்கிப் போன விரக்தியில் இருந்த கிரானைட் பிசினெஸ் தொழில் அதிபரும் ஏக்கத்துடன் இருந்திருக்கிறார். தமது வாட்டத்தைப் போக்கிக் கொள்ள தொடாத தொடர்புகளும் இல்லை.. ஏறாத படிக்கட்டுகளும் இல்லை.. எதுவுமே சரிவரலையே என்று கைபிசைந்து கொண்டிருந்தார் அவர்.
அப்போதுதான் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், நீங்க ரெடின்னா..நாங்களும் ரெடின்னு என கூறி சில உயர்மட்ட சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். அந்த தொழிலதிபரும் ஆஹா வழி பிறந்துவிட்டதே என்று நம்பி இதுவரை இந்த தேர்தலில் சுமார் ரூ1700 கோடியை அந்த கட்சிக்காக செலவழித்துள்ளாராம்.
அதாவது அந்த கட்சித் தலைவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரூ500 கோடியையும் மீதி 1200 கோடியை 40 தொகுதிகளுக்கும் தலா ரூ 30 கோடி வீதமும் அவர் பட்டுவாடா செய்துள்ளாராம்.
இதுவரை எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது.. எப்படியும் தேர்தலுக்குப் பின்னர் கிரானைட் பழையபடி பளபளத்துவிடும் என்ற பேராசையுடன் காத்திருக்கிறாராம்.
இப்போதைக்கு அவரைப் பொறுத்தவரையில் அவர் நம்பும் ஒரே வாசகம் "நம்பினோர் கெடுவதில்லை.. இது நான்மறை தீர்ப்பு" என்பதுதானாம்!!