எங்கள் பிள்ளைகளையும் டாக்டராக்குவோம் - நரிக்குறவ மக்களின் எழுச்சிமிகு உறுதி!
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை அருகில் உள்ள நரிக்குறவர் இன பெண்கள் திரளாக வந்து தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தனர். மேலும் தங்களது பிள்ளைகளையும் டாக்டர்களாக, அரசு அதிகாரிகளாக ஆக்குவோம் என்றும் உணர்ச்சிகரமாக உறுதி அளித்தது அனைவரையும் பெருமிதம் அடையச் செய்தது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தேவகோட்டை அருகே உள்ள நரிக்குறவர் சமுதயாம் வாழும் பகுதியில் கல்வி பயில்தல், பெண் கல்வியின் அவசியம் குறித்து இன்றைய சூழ்நிலையில் அறிந்திராத இக் குடும்பத்தினருக்கு பள்ளி மாணவிகள் தங்களின் தனிதிறமையினை வெளிப்படுத்தி கல்வியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை அருகில் உள்ள நரிக்குறவர் இன பெண்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க விருப்பமுடன் பெரும் கூட்டமாக வந்திருந்தனர்.
அப்போது அவர்களிடையே பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் பேசுகையில், பள்ளிக்கு தொடர்ந்து மாணவர்களை நீங்கள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் தான் அந்த பிள்ளைகளும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வெற்றிகரமான மனிதர்களாக உருவெடுப்பார்கள்.
தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லா கல்வி தொடர்பான பொருட்களை வழங்கி வருகிறது.அவற்றை தாங்களும் தங்கள் பிள்ளைகளுக்கு பயன்படுத்திகொள்ள வேண்டும் என பேசினார்.
நரிக்குறவர் காலனியிலிருந்து வந்திருந்த தாய்மார்களில் பாண்டிமீனாள், விஜயராணி, பிரியா ஆகியோர் பேசுகையில் ,நாங்கள் வேலைக்காக பிள்ளைகளை படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு எங்கும் அழைத்து செல்லமாட்டோம். அவ்வாறு வேலைக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களை நாங்களே காவல்நிலையத்தில் தெரிவித்து உரிய பாடம் கற்பிப்போம்.
வந்திருக்ககூடிய தாய்மார்களிடம் நாங்கள் பிள்ளைகளின் படிப்பை வீணாக்கமட்டோம் .இடையில் வேலைக்கு அழைத்து செல்ல மாட்டோம் என நாங்கள் எழுதி வாங்கி வைத்து உள்ளோம். தொடர்ந்து எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வருவார்கள். நன்றாக படித்து வாழ்க்கையில் அவர்களும் மிகபெரிய அரசு பதவிகளுக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
நாங்கள் தான் படிக்காமல் ஊர் ஊராக சுற்றி அலைகிறோம். எங்கள் குழந்தைகளை நாங்கள் அவசியம் படிக்க வைப்போம். பஸ்சில் எங்காவது போகவேண்டுமானால் ஊர் பெயர் என்னவென்று யாரையாவது கேட்டு செல்லவேண்டிய நிலையில் உள்ளோம். எங்களில் நிறைய பேருக்கு கைநாட்டு தான் வைக்க தெரியும். இந்த நிலை மாற வேண்டும். அதனால்தான் எங்கள் பிள்ளைகளை தொடர்ந்து பள்ளியில் படிக்க வைக்க தீவீர முயற்சி எடுப்போம்.
அவர்களையும் வரும் காலத்தில் பெரிய அரசு பணிகளில் அரசு அதிகாரிகளாகவும், டாக்டர்களாகவும் ஆக்குவோம். பள்ளியில் தமிழக அரசு தரும் கல்வி உதவிகளையும் முழு அளவில் எங்கள் பிள்ளைகளுக்கு பயன்படுத்தி கொள்வோம். என்று உறுதிபடப் பேசினார்கள்.
நரிகுறவ இன பெண்கள் குஷ்பு, ஜான்சி, சபீலா, ராதிகா, வனிதா, சுகன்யா, சுமதி மற்றும் நரிக்குறவ இன தலைவர் வேங்கையா உட்பட பலர் உடன் இருந்தனர். அவர்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டு பெருமை பொங்கத் திரும்பிச் சென்றனர். பிள்ளைகளும் சந்தோசமாக பள்ளியில் பாடம் படிப்பதாக கூறி பள்ளியில் பாடத்தைத் தொடங்கினர்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியைகள் முத்துலெட்சுமி, செல்வமீனாள் ஆகியோரும் படிப்பின் அவசியத்தை எடுத்து கூறினார்கள்.