ஜெயலலிதா எதிரி.... கருணாநிதி தலைவர்… புதிய பாதை போட்ட வைகோ
சென்னை: எங்களின் ஒரே எதிரி ஜெயலலிதா தான். அவரை வீழ்த்த வேண்டும் என்பது தான், எங்களின் தற்போதைய இலக்கு,'' என்று வைகோ கூறியுள்ளது மதிமுகவினருக்கு மட்டுமல்ல திமுகவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுநாள் வரை திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வந்த வைகோ, நீண்ட நாட்கள் கழித்து தலைவர் கலைஞர் என்று அழைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி பூந்தமல்லியில் நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில்தான் இந்த புதிய பாதையை போட்டுள்ளார் வைகோ.
பலமான கூட்டணி
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. இதனால், 2016 சட்டசபை தேர்தலில், பா.ஜ.கவையும் தமிழகத்தில் மற்ற எதிர்க்கட்சிகளையும் இணைத்து, பலமான கூட்டணி அமைத்து, அ.தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும் என்ற மனநிலையில், வைகோ இருக்கிறார்.
எதிரிகளை ஒருங்கிணைக்க தீவிரம்
இதற்காக, அவர் அ.தி.மு.க., வையும், தமிழக அரசையும் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வதில் தீவிரமாக இருக்கிறார். கூடவே, தி.மு.க.,வோடு கூட்டணியாக இணைய வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் மீது தாக்கு
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில், திறந்தவெளி மாநாடு நடத்தினார். அரசியலில், ம.தி.மு.க., எந்த பாதை நோக்கி பயணிக்கும் என்பதை, அந்த மாநாட்டில் வைகோ, கோடிட்டு பேசுவார் என்று, முன்கூட்டியே தகவல் பரவ, தமிழகம் முழு வதிலும் இருந்து, கட்சித் தொண்டர்கள், மாநாட்டுக்கு திரளாக வந்திருந்தனர். மாநாட்டில் பேசிய பலரும், தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும், கடுமையாக விமர்சித்தனர்.
கருணாநிதிக்கு பாராட்டு
மாநாட்டின் இறுதியில் பேசிய வைகோவும் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த்தோடு மட்டுமல்லாது தி.மு.க., தலைவர் கருணாநிதியையும் பாராட்டிப் பேசினார்.
தலைவர் கலைஞர்
இன, மொழி பிரச்னையில், ம.தி.மு.க.,வின் உணர்வுகளோடு ஒத்து பயணிக்கும் தலைவர் கலைஞரின் உணர்வுகளை பாராட்டுகிறேன்' என, மாநாட்டில் வைகோ பேசியது, மதிமுக, திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
எதிரிகளே காணோம்
தமிழகத்தில், கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில் எதிர்க்கட்சிகளே இல்லை என்று, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா சொன்னது, வைகோவை ரொம்பவே பாதித்து விட்டது. அன்றிலிருந்தே, அவர், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து, வரும் 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவை வீழ்த்தியாக வேண்டும் என, உறுதி பூண்டுவிட்டார் என்கின்றனர் மதிமுகவினர்.
ஒருங்கிணைக்க முயற்சி
அதற்காக, தி.மு.க., உட்பட அனைத்து கட்சியிலும், தனக்கு இணக்கமாக இருக்கும் பலரிடமும் வைகோ பேசி வருகிறார். எல்லாரும் இணைந்து, ஜெயலலிதாவை வீழ்த்தியாக வேண்டியதன், அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். அதற்காக, முதல் கட்டமாக, ம.தி.மு.க.,வினரை கூட்டணிக்காக, தி.மு.க.,வை நோக்கி கொண்டு செல்வதற்கான ஆயத்த பணிகளில் இறங்கி இருக்கிறாராம்.
யார் எதிரி? யார் நண்பன்
அதற்கு தொண்டர்களை தயார்படுத்தும் பணிக்காகத்தான், நசரத்பேட்டையில், கட்சியின் திறந்தவெளி மாநாடு நடத்தப்பட்டு, அதில், தி.மு.க.,வை நோக்கி ம.தி.மு.க., பயணிக்கும் என்பது போல பேசினாராம்.அதேநேரம், 'எதிரியை தீர்மானித்து விட்டோம். எதிரியை எதிர்த்து வீழ்த்துவதற்கு நண்பனை ஆதரிப்போம்' என்றும் வைகோ பேசினார்.
மதிமுக – திமுக கூட்டணி?
கூடவே, தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தார்.இதனால், விரைவில் தி.மு.க., - ம.தி.மு.க., கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கனிந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜயகாந்த் வருவாரா?
திமுகவை நோக்கி வைகோ நகர்ந்தால் அந்த கூட்டணிக்கு தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் வருமா? காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.