சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனு தள்ளுபடி
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுரேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை துறைமுகத்தின் தலைவராக 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சுரேஷ். இவர், துறைமுகத்தின் தலைவராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சுரேஷ், அவரது மனைவி கீதா மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில் சுரேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு கடந்த மார்ச் 25-ஆம்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, கீழ்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ், அவரது மனைவி கீதா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அகில இந்திய பணியில் 1982-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.
கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மத்திய உணவு கழகத்தின் மண்டல மேலாளராக மத்திய அரசின் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டேன். பின்னர், மத்திய கப்பல் துறைக்கு மாற்றுப்பணியாக மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தின் தலைவராக 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம்தேதி வரை பணி செய்தேன்.
இந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின்படி, மத்திய பிரதேசம் மாநில தலைமை செயலாளரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி பெறவில்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். ஆனால், என் மனுவை கீழ் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். என்னை வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணு கோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் என்.சந்திரசேகரன் ஆஜராகி வாதிட்டார். சென்னை துறைமுகத்தின் தலைவர் பதவியில் இருந்து 2009-ம் ஆண்டு ஜூலை 30-ஆம்தேதி விடுவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சுரேஷ், அதே ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம்தேதி வரை விடுப்பில் இருந்தார். அதன்பின்னர், மத்திய பிரதேச மாநிலப் பணியில் சேர்ந்தார்.
இவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக் கேட்டு மத்தியபிரதேச மாநில தலைமை செயலாளருக்கு சி.பி.ஐ. ஐ.ஜி. அருணாசலம் கடிதம் எழுதினார். ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் மீதான குற்றச்சாட்டு தங்கள் மாநில அரசுடன் தொடர்பு இல்லாதது என்று கூறி ஒப்புதல் வழங்க தலைமை செயலாளர் மறுத்து விட்டார்.
கே.சுரேஷ், 2004-ஆம் ஆண்டு முதல் அவர் மீண்டும் மத்திய பிரதேச மாநில பணியில் சேரும் வரை அவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகாரி என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி சிறப்பு போலீஸ் விதிகளின்படி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று அவர் வாதிட்டார்.
மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எம்.வெங்கட்ராமன் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வேணுகோபால் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கே.சுரேஷ், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பணி செய்தபோது குற்றம் செய்தார் என்று வழக்கு தொடரப்படவில்லை. அவர் மத்திய அரசின் மாற்றுப்பணியாக சென்னை துறைமுகத்தின் தலைவர் பதவியை வகிக்கும்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே குற்றம் நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில், சுரேஷ் மத்திய பிரதேச மாநில அதிகாரியாக பணியாற்றவில்லை. அவர் மத்திய அரசின் அதிகாரியாக மத்திய உணவு கழகத்தின் அதிகாரியாகவும், சென்னை துறைமுகத்தின் தலைவராகவும் பணி செய்துள்ளதால், அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய மத்திய பிரதேச மாநில அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை.
மேலும், இதுபோன்ற கோரிக்கையை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில் மனுதாரர் முன்வைக்கலாம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.