இலங்கை கருத்தரங்கில் சு.சுவாமி பங்கேற்க தடை கோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
மதுரை: இலங்கையில் நடைபெறும் ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 67 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் இந்தியாவின் சார்பாக சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவும் பங்கேற்க உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் படுகொலை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில், இலங்கை தலைநகர் கொழும்பில் 18.8.2014 முதல் 20.8.2014 வரை நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினர் இலங்கை செல்ல இருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழக பாதுகாப்பு மற்றும் தமிழக மீனவர்கள் நலன் கருதி இவர்களை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வரும் 12-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.