தொடர் மழை: நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக உதகை,கூடலூர் பந்தலூர் தாலுக்காக்களில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே கோவை மாவட்டம் வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவ மழையினால், சோலையாறு, காடம்பாறை, அப்பர் ஆழியாறு ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை
வால்பாறைசுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று காலை 8 மணிவரை சோலையாறு 87 மி.மீ, வால்பாறை 44 மி.மீ, கீழ் நீராறு 62 மி.மீ, மேல் நீராறு 94 மி.மீ, மழை அளவு பதிவாகியுள்ளது.
சோலையாறு அணை
தொடர்மழை காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 163.12 அடியானது. ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது.
வெளியேற்றப்படும் தண்ணீர்
அணைக்கு வினாடிக்கு 4,147 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 3,214 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு வினாடிக்கு 2,770 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
'பரம்பிக்குளம் அணை நீர் மட்டம்
பரம்பிக்குளம் அணைப்பகுதியில் 48 மி.மீ., மழை பெய்துள்ளது. சோலையாறு அணையிலிருந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 66.15 அடியாக உயர்ந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
அணைக்கு வினாடிக்கு 3,357 கன அடி வந்து கொண்டிருக்கிறது; 656 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணை ஓரிரு நாளில் நிரம்பும் தருவாயில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.