கனமழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஆற்றில் உடைப்பு
இதேபோல் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்ததில், தேங்காய்பட்டணம் பொழிமுகம் பகுதியில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது.
500 படகுகள் மாயம்
இதனல் நீரோடி முதல் மீடலம் வரையிலான 16 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் 500க்கும் மேற்பட்ட படகுகளை ஆற்று நீர் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
ரூ.10 கோடி சேதம்
இதன் மொத்த சேத மதிப்பு 10 கோடி ரூபாய் எனத் தெரிவித்த மீனவர்கள், படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் படகுகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தேங்காய்பட்டணம் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 18 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
கேரளாவில் கனமழை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக தென் கேரள பகுதியில் கன மழை பெய்தது. திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
அரசு விடுமுறை
சாலைகளிலும், தண்டவாளத்திலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
72 மணிநேரத்திற்கு மழை
கேரளத்தில் மேலும் 72 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மழை
தெற்கு கர்நாடகாவிலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.