கடலூர் ஸ்டேடியத்தை சேதப்படுத்திய வழக்கு – ஜெ.வுக்கு விளக்கம் கேட்டு ஹைகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: ஹெலிக்காப்டர் தளம் அமைப்பதற்காக விளையாட்டு மைதானத்தினை சேதப்படுத்திய வழக்கில், திங்கள் கிழமைக்குள் விளக்கம் கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
திமுக மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கடலூர் சென்றார்.
இதற்காக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை சேதப்படுத்தி ஹெலிகாப்டர் தளம் அமைத்திருந்தனர். இதனால் அங்கு விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவர் சார்பாக வழக்கறிஞர்கள் நீலகண்டன், ஜெரால்டு ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை பரிசீலித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், சீரமைக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்குமா அல்லது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்பாரா என்று திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.