படுகொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் குடும்பத்திற்கு சொந்த வீடு- நிதி திரட்டும் இந்து முன்னணியினர்
சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் குடும்பத்தாருக்கு சொந்த வீடு வாங்கித் தருவதற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகளில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட சுரேஷ்குமாருக்கு ஒரு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அம்பத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டதால் வருமானம் இன்றி தவிக்கும் அவரது குடும்பம் மாதவாடகையாக ரூ. 6 ஆயிரம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சுரேஷ்குமார் குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில், அவரது குடும்பத்தாருக்கு சொந்தவீடு வாங்கித் தரும் முயற்சியில் இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல்கட்டமாக இதுவரை கிடைத்த பணத்தைக் கொண்டு சுரேஷ்குமார் குடும்பத்தினர் தற்காலிகமாக "லீஸ்" வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.