பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் பதவி பறிப்பு... ஒரு விறுவிறு "பிளாஷ்பேக்"!
சென்னை: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு பரபரப்பு இன்றும் கூட மக்கள் மனதில் பரபரப்பாக நிழலாடிக் கொண்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்து அவரது பதவிக்கு ஆபத்து வருமா என்ற தற்போதைய பரபரப்புக்கு மத்தியில், ஜெயலலிதாவுக்கு 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த சோதனை குறித்த பிளாஷ்பேக்கை இப்போது பார்க்கலாம்.
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சியின்போது நடந்த பல்வேறு ஊழல்கள், முறைகேடுகளின் அடிப்படையில் அடுத்து வந்த திமுக ஆட்சியில் சரமாரியாக வழக்குகள் பாய்ந்தன. அதில் ஒன்றுதான் டான்சி நிலத்தை அதிகார துஷ்பிரயோகமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பார்ட்னர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் விலைக்கு வாங்கிய விவகாரம்.
அரசுக்குச் சொந்தமான இந்த நிலத்தைக் குறைந்த விலைக்குவாங்கியதால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதைக் காரணம் காட்டி சிபிசிஐடி போலீஸார் ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசிப், ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியன், டான்சி நிறுவன தலைவர் சீனிவாசன் மற்றும் அதிகாரி நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை 3 வது தனிநீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஜெ.வை. விடுவித்த உயர்நீதிமன்றம்
மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ் ஜெயலலிதாவை டான்சி வழக்கிலிருந்து விடுவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது.
ஸ்டே கொடுத்த சுப்ரீம் கோர்ட்
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாவை, டான்சி ஊழல் வழக்கிலிருந்து விடுவித்தது தவறு என்றும், அவரை மீண்டும் டான்சி வழக்கில் சேர்த்து, தனிக்கோர்ட் விசாரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தனிக்கோர்ட் நீதிபதி அன்பழகன், டான்சி வழக்கில் ஜெயலலிதாவை மீண்டும் சேர்த்து விசாரித்து வந்தார்.
போலி கையெழுத்து.. பரபரப்பைக் கிளப்பிய ஜெயலலிதா
இவ்வழக்கில் அரசுத்தரப்பில் மொத்தம் 50 பேர் சாட்சியம் அளித்தனர். ஜெயலலிதா தரப்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐ.ஏ.எஸ்.அதிகாரி சுந்தரேசன் உள்பட 12 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தனிக்கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் டான்சி நிலம் வாங்கியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பத்திரத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை. போலி கையெழுத்து உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வழக்கில் திருப்பம்
ஜெயலலிதாவின் இந்த வாக்குமூலம் டான்சி நில வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. வக்கீல்களின் இறுதிகட்ட விவாதத்தின்போது ஜெயலலிதா சார்பில், டெல்லி, சுப்ரீம்கோர்ட் வக்கீல் வினோத் அர்விந்த் பாப்டேவும், அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நடராஜனும் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்கள்.
3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
குற்றவாளிகள் தரப்பில் 50 சாட்சிகளையும் அரசு தரப்பில் 12 சாட்சிகளையும் நீதிபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் ஜெயலலிதா.
2001ல் வந்த சட்டசபைத் தேர்தல்
இந்த அப்பீல் மனு மீதான தீர்ப்பு வராத நிலையில், 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. அப்போது திமுக அரசுக்கு எதிராகவும் அதிருப்தி அலை வீசிய சமயம். அதேசமயம், ஜெயலலிதாவுக்கோ டான்சி நில வழக்கின் கருமேகம் முழுமையாக கலையாத நிலை.
4 தொகுதிகளில் அதிரடி வேட்புமனு
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் அதிரடியாக நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
புதுக்கோட்டை - ஆண்டிப்பட்டி - கிருஷ்ணகிரி -புவனகிரி
புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி ஆகிய தொகுதிகளில் அவர் மனுத் தாக்கல் செய்தார்.
வேண்டும் என்றே..!
தேர்தல் விதிமுறையின்படி ஒருவர் 2 தொகுதிகளில்தான் ஒரு சமயத்தில் போட்டியிட முடியும். ஆனால் ஜெயலலிதா இந்த விதிமுறைகளை நன்றாக தெரிந்துகொண்டே 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அவர் வேண்டும் என்றே மனு தாக்கல் செய்தது உறுதியானது.
உண்மையான நோக்கம்
உண்மையில் டான்சி நில வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. ஆனால் இந்தக் காரணத்திற்காக தனது மனு நிராகரிக்கப்படக் கூடாது என்ற நினைப்பில்தான் நான்கு தொகுதிகளில் அவர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மூலம் அதிக தொகுதிகளில் போட்டியிட மனு செய்ததால் நிராகரிக்கப்படுவதாக பேச்சு வரும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
நினைத்தபடியே தடை
அவர் நினைத்தபடியே அதிக தொகுதிகளில் போட்டியிட மனு செய்ததால் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா போட்டியிடாத நிலையில் அதிமுக தேர்தல் களத்தைக் கண்டது.
அபார வெற்றி
ஜெயலலிதாவின் பிரசாரம், திமுக மீதான அதிருப்தி அலை, ஜெயலலிதா மீதான அனுதாபம் என அனைத்தும் சேர்ந்து அதிமுகவுக்குப் பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அதை விட முக்கியமாக இந்தத் தேர்தலில் மூப்பனாரின் தமாக, காங்கிரஸ், பாமக ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
(தொடரும்)