வேலைக்குச் சென்றதால் கட்டிய மனைவி எரித்துக் கொலை – 6 வருடம் கழித்து கணவனுக்கு ஆயுள்!
சென்னை: சென்னையில் கட்டிய மனைவியை எரித்துக் கொன்ற இளைஞர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி.
இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
வேலை பார்த்த மனைவி:
திருமணத்துக்கு பின்னர் நந்தினி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பிடிக்காத கணவர்:
இது அருள்மணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவி நந்தினியிடம் தகராறு செய்து வந்தார்.
கணவன் -மனைவி தகராறு:
கடந்த 2008 ஆம் ஆண்டு, வழக்கம்போல கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
தீவைத்த கணவர்:
இதில் ஆத்திரம் அடைந்த அருள்மணி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை நந்தினி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
மனைவி பரிதாப பலி:
இதில் படுகாயம் அடைந்த நந்தினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
மரண வாக்குமூலம்:
முன்னதாக அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார், அருள்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கணவனுக்கு ஆயுள் தண்டனை:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா, நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கொலையான நந்தினியின் கணவன் அருள்மணிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.