தோளில் இருப்பது கடைசிவரைக்கும் கறுப்புத் துண்டுதான்.. மஞ்சளாக மாறாது: வைகோ
சென்னை: என் தோளில் போட்டுள்ள துண்டு கடைசி வரைக்கும் கறுப்புத் துண்டாகத்தான் இருக்கும். மஞ்சளாக மாறவே மாறாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
பாரதிய ஜனதாவின் பிரசார பீரங்கியாக வலம் வரும் வைகோ, ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
குஜராத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கிறார்கள். சமூகநீதி சிந்தனை உடையவர். எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி ஆகியவற்றை நாங்கள் விட்டுத்தர மாட்டோம்.
தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு தேவை, கூடங்குளம் அணு உலை கூடாது, சமூக நீதிக்கு எதிரான தடைகளை உடைப்போம் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.
மஞ்சளாக மாறாது..
கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவோம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்பதும் புதிய பொருளாதாரக் கொள்கையால் கடந்த 23 ஆண்டுகளாகத் தொழிலாளர் உரிமைகள் புதைக்கப்பட்டுவிட்டது என்பதும் எங்களது தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.
டெல்லியில் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் மதச்சார்பின்மை, சமூக நீதி, மனித உரிமையை வழியுறுத்தித்தான் நான் பேசியிருக்கிறேன்.
தோளில் போட்டுள்ள துண்டு, கடைசி வரைக்கும் கறுப்புத் துண்டாகத்தான் இருக்கும். மஞ்சளாக மாறவே மாறாது.
பாஜக துரோகம் செய்யாது...
திடீரென ஒருநாள் பாலசிங்கம் எனக்கு போன் செய்து, 'தலைவர் உங்களிடம் பேசச் சொன்னார். எங்களுக்கு வந்த கப்பலை இந்தியக் கடற்படை மடக்கிவிட்டது. இதனால் நமக்கு பெரும் இழப்பு என்று சொல்லச் சொன்னார்' என்று தகவல் தந்தார்.
உடனே, அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்தித்தேன். அவர் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கச் சொன்னார். 'நீங்கள்தானே இலங்கைக்கு பாகிஸ்தானும் சீனாவும் உதவி செய்கின்றன என்று சொன்னீர்கள். நம்முடைய எதிரி நாடுகளோடு சண்டைபோடும் புலிகளுக்குப் போகும் கப்பலை ஏன் தடுக்க வேண்டும்?' என்று கேட்டேன்.
அதிகாரிகளை அழைத்துப் பேசினார். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு புலிகளுக்குப்போன கப்பலை தடுக்கவில்லை. ஆட்சி மாறியது. காங்கிரஸ் அரசு புலிகளுக்குச் சென்ற கப்பல்கள் அனைத்தையும் தடுத்தது. இத்தகைய துரோகங்களை பி.ஜே.பி. அரசு நிச்சயம் செய்யாது அல்லவா?