திமுகவில் இணையவும் இல்லை.. லட்சிய திமுகவை கலைக்கவும் இல்லை: டி. ராஜேந்தர்
சென்னை: திமுகவில் தாம் இணையவில்லை என்றும் லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது:
அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் என்னுடைய சேவை தேவை என்று ஜெயலலிதா வெளிப்படையாக அழைத்ததால் பிரசாரத்திற்கு சென்றேன். இரு தொகுதியிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு நான்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. நானும் ஒரு காரணம் என்றுதான் கூறுகிறேன்.
ரூ. 3 உறுப்பினர் அட்டைக்காக..
தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர் அட்டை புதுப்பிக்கவில்லை என்று கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கினர். ஏழு வருட காலம் ஒரு கட்சியை, எல்லா பெரிய கட்சிகள் மத்தியிலும் வெற்றிகரமாக நடத்திய என்னை தி.மு.க சிறுபிள்ளைத்தனமாக வெளியேற்றியது.
ஆனால், திரும்பவும் நான் ஏன் தி.மு.க தலைவரை சந்தித்தேன் என்றால், அது நானாக சென்றதல்ல. ஆற்காடு வீராசாமி என் வீட்டிற்கே வந்து வற்புறுத்தி அழைத்து சென்றார்.
வேறவழியில்லாமல் கூப்பிட்டாக..
தே.மு.தி.க.வும், காங்கிரசும் இனி தங்களுடன் கூட்டணி சேராது என்று முடிவானதால் தி.மு.க தலைமை வேறுவழியின்றி ஆற்காட்டார் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தது. சூழ்நிலை கைதியாகத்தான் தி.மு.க தலைவரை சந்தித்தேன்.
ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும். பேசாமல் தி.மு.க.வில் இணைந்துவிடு என்றார்.
கருணாநிதியின் ராஜதந்திரம்
எனக்கு அப்போதுதான் அவரது எண்ணம் புரிந்தது. ஏற்கனவே இப்படிதான் திரும்பி வந்த என்னை தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைக்க சொல்லி தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார். கட்சியில் பெரிய பொறுப்பு தருவதாக கூறி கழற்றி விட்டார்.
அதனால், இந்த முறை நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுப்பு தெரிவித்து கூட்டணி மட்டும் வைத்துக் கொள்வோம். எங்களுக்கு 3 தொகுதிகளை மட்டும் தருமாறு கேட்டேன். அதற்கு யோசிப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
கருணாநிதியை தடுக்கும் சக்தி
கருணாநிதியுடனான சந்திப்பு பின்னணியை அப்போதே நான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துவிட்டேன். கருணாநிதியும் என்னை தி.மு.க.வில் இணைப்பது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், ராஜேந்தரை சேர்ப்பது குறித்து நான் முடிவு எடுத்து விட்டேன். ஆனால், கட்சியின் முடிவு பற்றி இன்னும் தெரியவில்லை என்ற தொனியில் அறிக்கை இருந்தது.
இதில் இருந்து என்ன தெரிகிறது கருணாநிதியால் முடிவு எடுக்க முடியவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி பிரச்னை அதிகம் உள்ளது. கருணாநிதியே முடிவு எடுத்துவிட்டபிறகு நான் தி.மு.க.வில் சேர்வதை தடுத்த சக்தி எது?
இணையவுமில்லை.. கலைக்கவுமில்லை..
நான் திமுகவில் இணையவில்லை. இணைந்த மாதிரி இருக்கும். ஆனால் இணையவில்லை. கருணாநிதி அணைத்த மாதிரி இருக்கும்.. ஆனால் அணைக்கவில்லை.
நான் திமுகவில் சும்மா கை கட்டி நிற்க விரும்பவில்லை. அப்படி இருப்பதற்கு நான் ஏன் அங்கு போக வேண்டும். அங்கு ஏகப்பட்ட உட்கட்சி குழப்பம் இருக்கிறது. நான் லட்சிய திமுகவை ஒருபோதும் கலைத்துவிடவில்லை.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.