இது ஒரு இடைவேளை... லட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை...: டி.ராஜேந்தர்
சென்னை: தேர்தல் காலம் ஒரு இடைவேளை என்றும், லட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே தனது முதல் வேலை என்றும் லட்சிய தி.மு.க. நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி லட்சிய தி.மு.க.விற்கு தி.மு.க. கூட்டணியில் சீட்டு தருவதாக சொல்லி அழைத்திருந்தார். என் முன்னாள் தலைவர், குரு என்ற முறையில் அவரை சந்திக்க சென்றேன். நான் சென்றிருக்கக்கூடாது.
நான் சென்றதற்கு காரணம் குரு மீதுள்ள மரியாதை நிமித்தம். ஆனாலும் கூட லட்சிய தி.மு.க.வை கலைத்து விட்டு தி.மு.க.விலே இணைய சொன்னபோது, கடந்த காலத்தில் தாயக மறுமலர்ச்சி கழகத்தை இணைத்து விட்டு ஏற்பட்ட கசந்த அனுபவத்தின் காரணமாக அதற்கு மறுத்து விட்டேன். சரி பிறகு அதை பார்த்துக்கொள்ளலாம் நீ முதலில் என்னோடு இணைந்து விடு என்றார்.
கருணாநிதியே, தி.மு.க.வின் பிரசார பகுதியை பலப்படுத்துவதற்காக டி.ராஜேந்தரை அழைத்தேன் தி.மு.க.விலே இணைக்க அழைப்பு கொடுத்தேன் என்று அவரே கைப்பட அறிக்கை கொடுத்தார்.
ஆனால் தற்போதைய தி.மு.க.வின் நிலை? தி.மு.க.விலே கருணாநிதி நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. என்னை கருணாநிதி தி.மு.க.வில் சேர்க்க நினைத்தார். ஆனாலும் நான் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக சேரவில்லை.
திரைப்படத்திற்கு கூட இரண்டு பாகம் உண்டு. என்னை பொறுத்தவரையில் முடிந்திருப்பது முதல் பாகம். இனிமேல் தான் இருக்கிறது இரண்டாம் பாகம். இந்த தேர்தல் காலம் ஒரு இடைவேளை எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு லட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை.
நான் இந்த தேர்தலில் களம் இறங்காமல் இருந்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் எந்த நிலையிலும் தரம் இறங்கி போக மாட்டேன் இது நிச்சயம். அது தான் என் லட்சியம்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.