ஹட்சன் பால் பண்ணை நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் ரெய்டு
ஆரோக்யா பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஹட்சன் நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.
சேலம் அருகே உள்ள காரிப்பட்டியில் ஹட்சன் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணை உள்ளது. இங்கு பால் சுத்தப்படுத்தி சென்னை மற்றும் வெளியூர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தயிர், நெய், வெண்ணையும் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த பால்பண்ணைக்கு நேற்று 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். பின்னர் இவர்கள் பால் பண்ணைக்குள் சென்று விசாரித்தனர்.
இந்த சோதனையின் போது பால் பண்ணையில் இருந்து யாரையும் வெளியில் விடவில்லை. அதுபோல் வெளியில் இருந்து யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதே நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை அலுவலகத்தின் 5 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.