ரித்தீஷ் அதிமுகவில் சேர்வதாக என்னிடம் சொல்லவில்லையே: மு.க. அழகிரி மறுப்பு
மதுரை: அ.தி.மு.க.வில் சேரப் போவதாக ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ் தம்மிடம் கூறியதாக சொல்வது தவறு என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான ரித்தீஷ் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் நான் சேருவதை மு.க.அழகிரியிடம் சொல்லி விட்டு வந்தாக கூறினார்.
அவரது இந்த பேட்டி குறித்து மு.க.அழகிரி கூறுகையில், ரித்தீஷ் அ.தி.மு.க.வில் சேரும் தகவலை என்னிடம் கூறியதாக பேட்டி அளித்துள்ளார். இதனை நான் முழுமையாக மறுக்கிறேன்.
அவர் அப்படி சொல்லியது தவறு. ரித்தீஷை கடந்த 6-ந் தேதி பார்த்திபனூரில் நடந்த நிகழ்ச்சியில் பார்த்தேன். அதன்பின் அவர் என்னிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வில்லை. அவர் அ.தி.மு.க.வில் சேருவதாக என்னிடம் கூறவில்லை.
அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்ததற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.