மீண்டும் மீண்டும் செய்வேன்.. ராசா பேச்சு
ஊட்டி: நான் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது செய்தது புரட்சி. அந்தப் புரட்சியை வாய்ப்பு கிடைத்தால் திரும்பத் திரும்ப செய்வேன் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
நீலகிரி தொகுதியில் கடைசி நாள் பிரசாரமாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் நீலகிரி தொகுதியில் அந்நியனாக போட்டியிட்டு தற்போது உங்களில் ஒருவனாக மாறியுள்ளேன். பல்வேறு தடைகளையும், வழக்குகளையும் தாண்டி மீண்டும் நீலகிரி மக்களைச் சந்திக்கிறேன்.
ஒரு மக்களவைத் தொகுதியில் இரு இடங்களில் அலுவலகங்களைத் தொடங்கியுள்ள ஒரே மக்களவை உறுப்பினராகிய எனக்கு நீலகிரி மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது.
34 இடங்களில் சி.பி.ஐ. சோதனையிட்டும் எதுவும் சிக்கவில்லை. ராசாவிடம் எந்த சொத்துமில்லையென சி.பி.ஐ.யும் தெரிவித்துவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த நட்டமும் இல்லையென நிதித் துறை அமைச்சகமும் கூறிவிட்டது.
அதனால், நான் செய்தது புரட்சியே. அதை குற்றம் என மற்றவர்கள் சொன்னால் ஏற்க முடியாது. அந்தப் புரட்சியை மீண்டும் செய்வேன்.
நீலகிரி மாவட்டத்தில் மின்வெட்டே இல்லாததற்கு கருணாநிதி வெளியிட்ட ஆணையே காரணம். ஆனால், தமிழகத்தில் தற்போது 12 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் துறையும் பாதிக்கப் பட்டுள்ளது. உலகிலேயே குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரே அரசு, தமிழக அரசு தான் என்றார் ராசா.