தமிழகம் முழுவதும் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் 41 இடங்களில் இயங்கி வருகின்றன.
தனியாரிடம் மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் சில சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
சமீபத்தில் சுங்கச் சாவடி கட்டணத் தொகையை 10 முதல் 40 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சுங்கச் சாவடி கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 15 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
கார், வேன்களில் பயணம் செய்வோரும், காய்கறி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், மற்றும் பஸ்கள் என கனரக வாகனங்களுக்கும் சுங்கவரி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கார், வேன் வாடகை உயர்வதுடன், காய்கறிகளின் விலை உயர்வும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இதற்கு லாரி உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பாடியநல்லூர், கொடைரோடு, ஓமலூர் உள்ளிட்ட 21 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 41 சுங்கச்சாவடிகளில், ஏற்கனவே 20 இடங்களில் கட்டண உயர்வு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.