தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ்
தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ்
சென்னை: தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தியுள்ளது காவல்துறை.
சென்னை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் நடந்த புலனாய்வு விசாரணையை ஆளில்லாத விமானம் மூலம் வீடியோவில் படமாக்கியுள்ளது போலீஸ்.
மேலும் இந்த கொலை நடந்த பகுதி முழுவதையும் இந்த விமானத்தை வைத்து ஆய்வும் நடத்தியுள்ளது போலீஸ்.
அடர்ந்த புதர்ப் பகுதி
உமா மகேஸ்வரியின் அழுகிய உடல் கிடந்த பகுதி அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடக்கும் இடமாகும். எனவே ஆட்களை அனுப்பி அங்கு ஆய்வு நடத்துவது சிரமம் என்பதால் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தியுள்ளது போலீஸ்.
க்ளூ கிடைக்குமா என்று ஆய்வு
மேலும் இந்த ஆய்வின்போது ஏதாவது துப்பு, தடயம் கிடைக்கிறதா என்பதையும் இந்த விமானத்தைக் கொண்டு ஆராய்ந்துள்ளது போலீஸ்.
200 மீட்டர் தூரத்தில்
டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் உமா மகேஸ்வரியின் உடல் புதர் பகுதியில் கிடந்தது. பிப்ரவரி 13ம் தேதி அவர் காணாமல் போனார்.
3 டி படமாக்கி ஆய்வு
தற்போது இந்த விமானம் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து வருகிறது போலீ்ஸ். மேலும் அதை 3டி முறையில் படமாக மாற்றியும் ஆய்வு செய்யவுள்ளனர்.
சட்டவிரோத கிரானைட் வழக்கில்
இதற்கு முன்பு மதுரையில் சட்டவிரோதமான முறையில் நடந்து வரும் கிரானைட் நிறுவன வழக்கில் ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்தி கிரானைட் சுரங்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பிறகு தற்போது ஆளில்லாத விமானத்தை ஒரு வழக்கில் பயன்படுத்தியுள்ளனர்.
பரமக்குடியிலும்
இதேபோல பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி நடந்த சமயத்திலும், இம்மானுவேல் சேகரன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியின்போதும் ஆளில்லாத விமானத்தை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக காவல்துறை பயன்படுத்தியுள்ளது.
10 கிலோ எடை கொண்டது
சென்னைகொலை வழக்கில் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லாத விமானமானது 10 கிலோ எடை கொண்ட குட்டியூண்டு விமானமாகும். மொத்தம் 6 மணி நேரம் அது பறந்து வீடியோ படம் எடுத்துள்ளது.