வருமானவரி வழக்கு: அக். 1ல் ஜெ. ஆஜராக உத்தரவு! இனி ஆஜராக விலக்கு அளிக்க முடியாது- நீதிபதி உறுதி!
சென்னை: வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இனியும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கவே முடியாது என்றும் நீதிபதி தட்சிணாமூர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்
நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து 20 சாட்சிகளின் விசாரணையை தொடங்க வேண்டும் என்று வருமான வரித்துறையின் வழக்கறிஞர் ராமசாமி வாதாடினார்.
ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் வாதாடினார்.
சமரசமாக இவ்வழக்கை தீர்க்க வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா மனு கொடுத்ததிருப்பதாகவும் அந்த மனு மீது விரைவாக முடிவு எடுக்கும் படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதாடினார்.
அவ்வாறு உத்தர விட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வருமான வரித்துறை வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தட்சிணா மூர்த்தி தமது முடிவை பிற்பகலில் அறிவிப்பதாக தெரிவித்தார். பிற்பகலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தட்சிணாமூர்த்தி, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் அக்டோபர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். இவ்வழக்கில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி விசாரணை நடைபெறும். கேள்விகளுக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா பதிலளிக்க வேண்டும். நேரில் ஆஜராகாமல் இருக்க இனி ஜெயல்லிதாவிற்கு எந்த விலக்கும் அளிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தார்.