தேசிய நதிகளை இணைக்க பாஜக அரசு முன்னுரிமை தர வேண்டும்... கருணாநிதி கோரிக்கை
சென்னை: தேசிய நதிகளை இணைக்க பாஜக அரசு சிறப்பு முன்னுரிமை கொடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள ராணுவ கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ள பாஜக பிரதிநிதிகள், முந்தைய காங்கிரஸ் கட்சியினரைப் போல் இல்லாமல் தமிழர் நலனிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளா எதிர்ப்பு...
நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியில் 2007-8-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டது.
சாத்தியக் கூறுகள்...
நதிகளை இணைக்க வேண்டும் என்று திமுக வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில் நதிகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது.
வலியுறுத்தல்...
அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், மாநிலங்களவை உறுப்பினர் தங்கவேலும் நதிகளை இணைக்க வலியுறுத்தினர்.
கடிதம்...
இந்த நிலையில் மத்திய நிதின் கட்கரி தலைமையிலான மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் பங்கஜ் ஜெயினும், மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையிலான மத்திய நீர் வளத்துறையின் செயலர் அலோக் ராவத்தும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விரைந்து நடவடிக்கை...
அதில் தண்ணீரை நம்பியுள்ள விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், குடிநீருக்காகவும் மக்கள் திண்டாடும் நிலையும் உள்ளது. எனவே, நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னுரிமை...
நதிகளை இணைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டினாலும், கேரளம் போன்ற சில மாநில அரசுகள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்தியா முழுவதுக்குமான நன்மையைக் கருத்தில் கொண்டு, நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பாஜக அரசு சிறப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கருத்தரங்கம்...
இலங்கை ராணுவம் அடுத்த மாதம் கொழும்புவில் கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளது. அதில் இந்திய ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் தகுதியில் உள்ள உயர் அதிகாரிகளும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸைப் போல பாஜக...
இந்த கருத்தரங்கத்தில் இலங்கைக்கு நட்பு நாடுகள் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளதாம். இலங்கை விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்துகொண்டதைப் போலவே, பாஜக அரசும் நடந்துகொள்கிறது.
தமிழ் இனப் பாதுகாப்பு...
அப்படி நடந்துகொள்ளாமல் தமிழ் இனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்பட வேண்டும் என இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.