செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை முன்னாள் போலீஸ் எஸ்.ஐ ஆந்திராவில் கைது!
சென்னை: செம்மரக் கட்டை கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்ட ஓய்வுபெற்ற துணை காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பணியாற்றியவர் மூசா சாஹிப் (60). செம்மரக் கட்டை கடத்தல் வழக்கு தொடர்பாக ஆந்திர காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவர், குண்டூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்,. மூசா சாஹிப், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த செம்மரக் கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்குன்றத்தில் மூசா சாஹிப் பணியாற்றியபோது, செம்மரக் கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்த மதி, குமார் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், கடந்த 2006ல் பணியிலிருந்து விலகிய மூசா சாஹிப், கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாகவும் ஆந்திர காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இவர்கள்மீது 12 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.