காதலித்த பெண்ணை ஏமாற்றிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் புழல் சிறையில் அடைப்பு
வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்சினிக்கும், வருண்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. யுபிஎஸ்சி தேர்வு முடிவில் வருண்குமார் ஐ.பி.எஸ் பதவிக்குத் தேர்வானார்.
அவருக்காக பிரியதர்சினி தனது ஐ.ஏ.எஸ் கனவை உதறி விட்டு வருண்குமாருக்கு உதவி செய்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் வருண்குமார் - பிரியதர்சினி நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் வருண்குமார் திடீரென பிரியதர்சினி குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமணம் நடைபெறாமல் நின்று போனது.
இதுபற்றி கடந்த ஆண்டு பிரியதர்சினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண்குமார் மீது புகார் செய்தார். அந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
வருண்குமாரை நேரில் அழைத்தும் விசாரணை நடந்தது. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வருண்குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை வருண்குமார் நாடினார். அங்கும் அந்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து பிரியதர்சினி, மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து வருண்குமாரை கைது செய்ய வலியுறுத்தினார்.
இந்த நிலையில் வருண்குமார் இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென ஆஜராகி சரணடைந்தார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் வருண்குமார் ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது.
இவ்விசாரணையின் முடிவில் அவரை வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.