அம்மாவுக்கு தண்டனை: கன்னடர், தமிழர் வெறுப்பை தூண்டிவிடக் கூடாது: தா. பாண்டியன்
சென்னை: ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்துள்ளது பற்றி தமிழக, கர்நாடக மக்களிடையே யாரும் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ இல்லை, சுப்பிரமணிய சாமி தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதித்து வருகிறார்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மேல் முறையீடு செய்து மறுதீர்ப்பு பெற வாய்ப்பு இருக்கிறது.
அதனால் இந்த தீர்ப்பு பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த தீர்ப்பு மூலம் தமிழக, கர்நாடக மக்களிடையே யாரும் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ இல்லை, சுப்பிரமணிய சாமி தான்.
தீர்ப்பை கூறியது தான் கர்நாடக நீதிபதி. அதிமுகவினர் தங்கள் கட்சி தலைவி மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பு பற்றி விமர்சனம் செய்கிறார்கள். நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சிக்க கூடாது.
புதிய முதல்வர் வறட்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறும். விலைவாசி உயர்வை கண்டித்து அக்டோபர் 6ம் தேதி நடப்பதாக இருந்த மறியல் போராட்டம் அதே மாதம் 16ம் தேதி நடைபெறும் என்றார்.